முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியை விட்டு விலகினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
புதுவை தனியார் விடுதியில் தங்கியுள்ள அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்களின் முக்கிய நோக்கமே கட்சியை ஒன்றுபடுத்த வேண்டும். கட்சியைப் பிளவுபடுத்தக் கூடாது என்பதுதான். பொதுச் செயலாளர் சசிகலாவை நீக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதால்தான் நாங்கள் இங்கு வந்து தங்கி இருக்கிறோம்.
ஆளுநர் 7 நாள்களுக்குள் எங்களை அழைத்துப் பேச வேண்டும். இதில், தற்போது 5 நாள்கள் முடிந்துவிட்டன. அவர் அழைப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையெனில், குடியரசுத் தலைவரைச் சந்திப்போம்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருப்பதால் எதுவும் நடக்கலாம். அதனால், பாதுகாப்பு கருதி நாங்கள் இங்கு வந்து தங்கி இருக்கிறோம்.
20 பேர்களாக நாங்கள் உள்ள நிலையில் எங்களைப் பயமுறுத்திப் பார்க்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், துணைப் பொதுச் செயலாளர் தினகரனை ஏற்க வேண்டும், பொதுச் செயலாளர் சசிகலாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கோரிக்கைகளில் உறுதியாக உள்ளோம் என்றார் அவர்.
உடனிருந்த மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. கூறுகையில், அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி சசிகலாவை நீக்க முடியாது. எங்கள் "ஸ்லீப்பர் செல்' எம்.எல்.ஏக்கள் அப்போது எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றார்.