சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்து முடிவெடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை கழக அலுவலகத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட இந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்குவது, சசிகலா, தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்ற தீர்மானமும், நமது எம்.ஜி.ஆர், ஜெயா தொலைக்காட்சி மீட்டெடுக்கப்படும் என்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலாவை நீக்குவது என்பது உறுதியாக்கப்பட்டுள்ளதால், விரைவில் பொதுக்குழு கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒரிரு வாரங்களில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.