தமிழக சட்டப் பேரவையில் குட்காவைக் காண்பித்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 பேர் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான கடந்த ஜூலை 19-ஆம் தேதி பொதுத் துறை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அவற்றை பேரவையில் எடுத்துக் காண்பித்தார். அவருடன் திமுக உறுப்பினர்கள் சிலரும் தங்களிடம் இருந்த பாக்கெட்டுகளை வெளியே எடுத்து பேரவையில் காட்டினர்.
பேரவை உரிமைக் குழு: தடை செய்யப்பட்ட பொருள்களை சட்டப் பேரவையில் காட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீதான பிரச்னை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தப் பிரச்னை அவை உரிமைக் குழுக் கூட்டத்தில் திங்கள்கிழமை விவாதிக்கப்பட்டது. இதற்காக உரிமை மீறல் குழுக் கூட்டம் அதன் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் மாலை 5 மணிக்குத் தொடங்கியது.
21 பேருக்கு நோட்டீஸ்: கூட்டத்தில், அதிமுக சார்பில் அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன், எம்.கீதா, எஸ்.எஸ்.சரவணன், எம்.பரமேஸ்வரி, ஆர்.மருதமுத்து,ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எஸ்.டி.கே.ஜக்கையன், ஆர்.தங்கதுரை, டி..ஏ.ஏழுமலை ஆகிய மூன்று பேர் பங்கேற்கவில்லை.
திமுகவைச் சேர்ந்த கே.சுந்தர், கே.ஆர்.பெரியகருப்பன், மதிவாணன், ரகுபதி, காங்கிரஸ் சார்பில் விஜயதரணி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.,க்கள் ஒருவார காலத்துக்குள் பிரச்னை தொடர்பாக பதிலளிக்குமாறு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.