சென்னை: ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி டி.டி.வி. தினகரன் அணி, ., நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதியில் எல்லாமே சரியாக இருந்தால் நான் வர வேண்டிய அவசியம் இல்லை. இளைஞர்கள் தேர்தல் களத்திற்கு வருவதில் தவறேதும் இல்லை. அதற்காகவே நான் இங்கு போட்டியிடுகிறேன். ஆர்.கே.நகர் மக்களின் பிரதிநிதியாகவே இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்கவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து கொண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன். இதில் நான் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செயல்படவில்லை.
இது எந்த வித அரசியல் நோக்கத்தினையும் அடிப்படையாகக் கொண்ட காரியம் இல்லை. இளைஞர்கள் அதிக அளவில் முன்வர வேண்டும். என்னை வாழ்த்தி பல தரப்பினர் கருத்து கூறியுள்ளது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
இவ்வாறு விஷால் தெரிவித்தார்.