ஆர்.கே.நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக, தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாக நடிகர் விஷால் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வியாழக்கிழமை பிற்பகலில் வந்த அவர் தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமியை சந்தித்தபின் அவர் நிருபர்களிடம் கூறியது:
தேர்தல் நடத்தும் அதிகாரியைச் சந்தித்தேன். செவ்வாய்க்கிழமை மாலையில் எனது விளக்கத்தைக் கேட்ட தேர்தல் அதிகாரி, உறுதிமொழி படிவத்தை ஏற்று, வேட்புமனுவை ஏற்பதாக ஒலிபெருக்கியில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவேன். அத்துடன் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடருவேன்.
காவல்துறை பாதுகாக்க வேண்டும்: என் வேட்புமனுவுக்கு முன்மொழிந்திருந்த தீபன், சுமதி ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க வேண்டும்.
நான் தேர்தலில் போட்டியிடுவதை விட அவர்களின் பாதுகாப்பே தற்போது முக்கியமானது என்றார்.
இளைஞர்கள் போராட்டம்: நடிகர் விஷாலுடன் வந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் கையொப்பம் பெற்று தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் விஷாலின் வேட்புமனுவை ஏற்க வலியுறுத்தி சிறிதுநேரம் கோஷமிட்டனர். நடிகர் விஷால் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திக்க உள்ளே சென்றபோது, நடிகர் ரமணன் மண்டல அலுவலகத்துக்குள் செல்ல முயன்றார். அவரை போலீஸார் தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பினர்.