உத்தரமேரூர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தார்.
உத்தரமேரூரை அடுத்த சித்தாலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மகள் பிரேமலதா (16). திருமுக்கூடல் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பிரேமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகண்டன் காயமடைந்தார்.
தகவலறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், லாரிக்கு தீ வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.