இணையதள குற்றங்களைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார்.
ஆவடி அருகே உள்ள இந்துக் கல்லூரியில், "இணையதள குற்றங்கள் மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பு' குறித்த 2 நாள் பன்னாட்டுக் கருத்தரங்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரியின் அறக்கட்டளைத் தலைவர் வி.சேதுராம் தலைமை வகித்தார். செயலாளர் எம்.வெங்கடேசபெருமாள், இயக்குநர் என்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் கல்பனா பாய் வரவேற்றார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வாழ்த்திப் பேசினார்.
இதில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்தியாவில் நகரங்களுக்கு இணையாக கிராமங்களும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்ட வேண்டும். அப்படி கணினிமயமாக்கும்போது, இணையம் சார்ந்த குற்றங்கள் நாட்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இணையதள குற்றங்களைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக சட்டமும் இயற்ற வேண்டும்.
இதன் மூலம், இணையதள மோசடிகளால் மக்கள் ஏமாறுவது தடுக்கப்படும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருப்பது போன்ற, கணினி தகவல்களை பாதுகாக்கும் முறையை நம் நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். சமூக வளைத்தலங்களை பயன்படுத்தும் மாணவிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
இக்கருத்தரங்கில், ஐஎஸ்டிஎப்ஆர்எப் துணைத்தலைவர் டாக்டர் கே.ராமசுப்ரமணியம் அறங்காவலர்கள் எம்.வி.கண்ணைய செட்டி, சி.வெங்கடாசலம், உம்முடி ஸ்ரீஅரி, பிரவீன் தெள்ளகுலா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் திலகராஜ் நன்றி கூறினார்.