சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, சென்னை புழல் சிறைக்கு மாற்றத் தேவையான நடவடிக்கைகளில் அவரது வழக்குரைஞர் குழு ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை மறுக்கவோ, உறுதி செய்யவோ மறுத்துவிட்ட அதிமுக மூத்த நிர்வாகி, பெங்களூர் சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலர் சசிகலா சென்னை சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று மட்டும் கூறினார்.
மேலும் இது குறித்து பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார், சென்னை சிறைக்கு சசிகலாவை மாற்றும் நடவடிக்கையில் வழக்குரைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுத்து, சசிகலாவை சென்னையில் உள்ள சிறைக்கு மாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.
21 ஆண்டு காலமாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த பிப்ரவரி 14ம் தேதி, குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தனி நீதிமன்றம் அளித்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து, 15ம் தேதி சசிகலா உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.