சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயார் என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தனது சொந்த கருத்தையும் பதிவு செய்திருந்தார். மேலும், இது குறித்து பதில் அளிக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஞானசேகரன் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரத்தை தாக்கல் செய்ய தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி 23ம் தேதி ஒத்தவைக்கப்பட்டது.