ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஜனவரி 9-ஆம் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை மாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. இதனால் சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும் என தமிழக அரசு சார்பில், ஆந்திர அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை திறக்கும்படி கேட்டனர்.
இதைத் தொடர்ந்து ஜனவரி 9-ஆம் தேதி கண்டலேறு அணையில் விநாடிக்கு 1,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக 152 கிலோ மீட்டர் நீளத்தைக் கடந்து வியாழக்கிழமை தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ஜீரோ பாய்ன்டுக்கு வந்தடைந்தது.
அந்த தண்ணீர் இணைப்புக் கால்வாய் வழியாக 24 கி.மீ கடந்து வெள்ளிக்கிழமை மாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது. பூண்டி ஏரியில் மொத்தமுள்ள 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவில், சனிக்கிழமை காலை வரை 546 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
தண்ணீரின் வரவு அதிகரிப்பதையொட்டி, பூண்டி ஏரியிலும் கொள்ளளவு அதிகரிக்கும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.