காஷ்மீர் பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் புதன்கிழமை (பிப். 1) தகனம் செய்யப்படுகிறது.
ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர், பூமிநாதன் மகன் இளவரசன் (27). கடந்த 2012 ஆம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்த இவர், காஷ்மீரில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் இளவரசன் சிக்கி உயிரிழந்தார்.
மீட்கப்பட்ட அவரது உடல், அவரது சொந்த ஊரான கண்ணந்தங்குடி கீழையூரில் ராணுவ மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்படுகிறது. இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒரத்தநாடு அனைத்து வர்த்தக சங்கம் சார்பில் புதன்கிழமை காலை முதல் நண்பகல் 12 மணி வரை வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.