ஜிஎஸ்டியால் பேக்கரி தொழில் முடங்கும் அபாயம்: பிஸ்கட் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்படுமா?
பன், பிஸ்கெட் உள்ளிட்ட பேக்கரி பொருள்களுக்கு 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொழில் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பன், பிஸ்கெட் உள்ளிட்ட பேக்கரி பொருள்களுக்கு 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொழில் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகம் விரும்பும் இப்பொருள்கள் மீதான வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என பேக்கரி தொழில் புரிவோர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பேக்கரி கடைகள் உள்ளன. சுமார் 10 லட்சம் பேர் இந்தத் தொழிலை சார்ந்து இருக்கின்றனர். இந்த நிலையில், பன், பிஸ்கட் உள்ளிட்ட பேக்கரி பொருள்களின் மீது 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. பிரட், ரஸ்க் வகைகளுக்கு 5 சதவீத வரியும், கேக், குக்கீஸ், பிஸ்கட் உள்ளிட்டவற்றுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பேக்கரி உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ரஸ்க் வகைகளை பொருத்தவரை ஒரு கிலோ ரூ.180, ரூ.200, ரூ.250 என விற்கப்படுகின்றன. இவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. உதாரணமாக, ரூ.200 இருந்த ஒரு கிலோ ரஸ்க் வரியுடன் ரூ.210 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல, கேக் வகைகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. உதாரணமாக, ரூ.500 மதிப்புள்ள பிளாக் பாரஸ்ட் கேக், ரூ.90 வரி சேர்ந்து ரூ.590 ஆக அதிகரித்துள்ளது. ரூ.300 மதிப்புள்ள குக்கீஸ் வரியுடன் சேர்த்து ரூ.354 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்றைய அவசர உலகில் எளிதாக கிடைக்கும் உணவுப் பொருளாக பேக்கரி உணவு வகைகள் விளங்குகின்றன. சிறுவர்கள், பெரியவர்கள், நோயாளிகள் என்று பல தரப்பினர் இவற்றை விரும்பிச் சாப்பிடுகின்றனர். இந்நிலையில், தற்போதைய வரி விதிப்பால், தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று பேக்கரித் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பேக்கரித் தொழில் கூட்டமைப்பு தலைவர் வி.மனோகரன் கூறியது:
மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில், பேக்கரி உணவுப்பொருள்கள் 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இந்த நிலையில், இவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பாரமாக அமையும்.
முன்பு பிரட், ரஸ்க், பன் ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படவில்லை. கேக், குக்கீஸ், பிஸ்கட் ஆகியவற்றுக்கு 5 சதவீதம்தான் வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 18 சதவீத வரி விதிப்பு என்பது மிக அதிகம். பேக்கரி உணவுப் பொருள்கள் மீதான 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மேலும், பேக்கரி பொருள்கள் ஓரிரு நாள்களில் அழியக்கூடியவை. இதற்கான செலவுக்கு உரிமையாளர் தான் பொறுப்பு. இதை எல்லாம் வரி விதிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உள்ளூர் தொழில்கள் நசுங்கும் நிலை: பேக்கரி பொருள்கள் மீதான வரி வதிப்பைப் பொருத்தவரை, பன்னாட்டு நிறுவனங்களும், உள்ளூர் தொழில் நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியாக 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் இயந்திரமயமாக்கி, பேக்கரி பொருள்களை தயாரித்து வழங்குகின்றன. அவர்கள் எந்தவித வேலை வாய்ப்பையும் வழங்கவில்லை. அதேநேரத்தில், உள்ளூர் நிறுவனங்கள் ஏராளமான வேவை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கின்றன. தற்போதைய வரி வதிப்பால் உள்ளூர் வேலைவாய்ப்பு குறைந்து, தொழில் முடங்கும் நிலை ஏற்படும் என்றார் அவர்.
*முன்பு பிரட், ரஸ்க், பன் ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படவில்லை. கேக், குக்கீஸ், பிஸ்கட் ஆகியவற்றுக்கு 5 சதவீதம்தான் வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 18 சதவீத வரி விதிப்பு என்பது மிக அதிகம். *