தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றத் திட்டம்

DIN

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாக உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. சேர்க்கையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவர் அளித்த பேட்டி:
அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பிறகு, அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதலாக இருக்கும் ஆசிரியர்கள், அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மாற்றப்படுபவர்கள், 3 ஆண்டுகள் ஒப்பந்தப் பணி அடிப்படையிலேயே மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது.
அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதனால், கடும் நிதி நெருக்கடியை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சந்தித்து வருகிறது. எனவே, அந்த மருத்துவக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அவ்வாறு அந்தக் கல்லூரி நேரடி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டாலும், பிற அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதுபோன்ற கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படமாட்டாது. இப்போது அந்தக் கல்லூரியில் என்னவிதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்றார்.
ரூ. 80 கோடி நஷ்டத்தில் இயங்கும் மருத்துவக் கல்லூரி: இதற்கிடையே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரியானது கடந்த 2016-17 கல்வியாண்டில் ரூ. 63 கோடி நஷ்டத்திலும், நிகழாண்டில் ரூ. 80 கோடி நஷ்டத்திலும் இயங்கி வருகிறது என்று அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. 100 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் எம்.பி.பி.எஸ். மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ. 5.50 லட்மும், பிடிஎஸ் மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. ஆனால், ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பிற செலவுகளுக்கென ஆண்டுக்கு ரூ. 100 கோடி வரை மருத்துவக் கல்லூரிக்குச் செலவாகிறது. இதனால், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மற்ற நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுசெல்வது என்பது வரவேற்கத்தக்க விஷயம் என பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT