தமிழ் மக்களின் உரிமையை மத்திய அரசு நிராகரிக்கிறது: நீதிபதி ஹரிபரந்தாமன்
தமிழ் மக்களின் உரிமையை மத்திய அரசு நிராகரிக்கிறது என சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கூறினார்.
தமிழ் மக்களின் உரிமையை மத்திய அரசு நிராகரிக்கிறது என சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கூறினார்.
தலித் கிறஸ்தவ மக்கள் கூட்டமைப்பு மற்றும் மாணவர் அமைப்புகள் சார்பில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு நீதிபதி ஹரிபரந்தாமன் பேசியது:
நீட் தேர்வு விவகாரத்தில் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. 7 கோடி தமிழ் மக்களின் உரிமையை மத்திய அரசு நிராகரிக்கிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது. தமிழக அரசு 31-1-2017 அன்று, சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டுவந்தது. அந்தச் சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டு ஒருமனதாக நிறைவேற்றின. ஆனால் இன்றுவரை அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை என்றார் ஹரிபரந்தாமன்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.