முகப்பு
தமிழ்நாடு

தேச துரோக வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்; விசாரணை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தேச துரோக வழக்கில் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து 5-வது

Updated On : 2 ஜூன், 2017 at 11:53 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:09 PM

சென்னை: தேச துரோக வழக்கில் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து 5-வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தேசத் துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.

இந்நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், தானாக முன் வந்து ஏப்ரல் 3 ஆம் தேதி காலை எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் ஆஜரானார் வைகோ.

Advertisement

அப்போது, நீதிபதியிடம் பிணையில் செல்ல விருப்பமில்லை என வைகோ தெரிவித்ததை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

52 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு அவர், தனக்கு ஜாமீன் கோரி கடந்த மாதம் 22 ஆம் தேதி மனு செய்திருந்தார்.

அந்த மனுவை ஏற்று நீதிமன்றம் மே மாதம் 24 ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதன்படி, சென்னை புழல் சிறையில் இருந்து வைகோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. வைகோ நேரில் வந்து நீதிமன்றத்தின் முன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் 17 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், தான் குற்றமற்றவர் என்றும் தான் பேசிய எந்தப் பேச்சை திரும்பப் பெற மாட்டேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.