சென்னை: தென்மேற்குப் பருவ மழை தமிழகம் முழுவதும் பரவியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவ மழை பரவியுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உத்திரமேரூரில் 11 செ.மீ. மழையும், ஆலங்காயத்தில் 9 செ.மீ. மழையும், வானூர் மற்றும் செங்கம் பகுதிகளில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தற்பொழுது மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், அடுத்து வரும் 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.