இடிந்தகரை மீன் ருசிக்குமா? பேரவையில் சுவையான விவாதம்
இடிந்தகரை மீன்கள் ருசிக்குமா என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று மிகச் சுவையான விவாதம் நடைபெற்றது.
சென்னை: இடிந்தகரை மீன்கள் ருசிக்குமா என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று மிகச் சுவையான விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில், இடிந்தகரையில் மீன்கள் பதப்படுத்த குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படுமா? என்று எம்எல்ஏ இன்பதுரை கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மீன்கள் பதனிடும் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என்று பதிலளித்தார்.
மேலும், இடிந்தகரை பகுதியில் மீன்கள் பதப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைக்கும் தனியார் நிறுவனத்தை அடையாளம் காட்டினால் உடனே அமைக்கப்படும் என்றும் கூறினார்.
இதற்கு, இடிந்தகரை மீன்தான் மிக ருசியாக இருக்கும் என இன்பதுரை கூறியதால் பேரவையில் சுவாரஸ்யம் ஏற்பட்டது.
இதைக் கேட்ட சபாநாயகர் தனபால், ருசியான மீனென்றால் இடிந்தகரை மீனை எல்லா உறுப்பினர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
உடனே எழுந்து நின்ற அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறை மானியக் கோரிக்கை அன்று அனைத்து உறுப்பினர்களுக்கும் இடிந்தகரை மீன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.