ஒரே ஆண்டில் 3 முதல்வர்கள்: திமுக - அதிமுக காரசார விவாதம்
ஒரே ஆண்டில் மூன்று முதல்வர்கள் மாறியது குறித்து திமுக - அதிமுக உறுப்பினர்கள் காரசாரமாக வெள்ளிக்கிழமை விவாதித்தனர்.
ஒரே ஆண்டில் மூன்று முதல்வர்கள் மாறியது குறித்து திமுக - அதிமுக உறுப்பினர்கள் காரசாரமாக வெள்ளிக்கிழமை விவாதித்தனர்.
சட்டப்பேரவையில் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் புகழேந்தி பேசியது: இந்தச் சட்டப்பேரவை மிகவும் சிறப்புப் பெற்றது. நின்ற தேர்தலில் எல்லாம் வெற்றி பெற்ற கருணாநிதி இந்த அவையில் உறுப்பினராக உள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவரான துரைமுருகன் இந்த அவையில் உள்ளார். இவர்கள் இருவரும்தான் இந்த அவையின் மூத்த உறுப்பினர்கள். கடந்த முறை துரைமுருகன் பேசும்போது இந்த அவையில் எல்லா இடத்திலும் உட்கார்ந்திருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு சிறப்புப் பெற்றது திமுக. ஆனால், ஒரே ஆண்டில் அதிமுகவின் ஆட்சியில் 3 முதல்வர்கள் மாறியுள்ளனர் என்றார்.
அப்போது அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் குறுக்கிட்டுக் கூறியது: 1969-இல் அண்ணா மறைவைத் தொடர்ந்து நெடுஞ்செழியன், கருணாநிதி என ஒரே ஆண்டில் மூன்று முதல்வர்கள் திமுகவில் இருந்தனர் என்பதை உறுப்பினர் மறந்துவிட்டுப் பேசுகிறார் என்றார்.
பேரவைத் தலைவர் தனபால்: திமுக உறுப்பினர் புகழேந்தி 1971-இல்தான் பிறந்தார். அதனால், அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை விடுங்கள்.
புகழேந்தி: 72-இல் பிறந்தேன். அதிமுகவின் அமைச்சர்கள் தொடங்கி எல்லோரும் பேரவையில் பாட்டுப் பாடுகின்றனர். எனக்கும் ஒரு பாடல் பாட வேண்டும் என்று ஆசை.
பேரவைத் தலைவர்: பாடுங்கள்.
புகழேந்தி: ஒரு பொம்மலாட்டம் நடக்குது. ரொம்பப் புதுமையாக இருக்கிறது. நாலுபேரு நடுவுலே, நூலு ஒருத்தன் கையிலே.
பேரவைத் தலைவர்: மானியக் கோரிக்கை மீது கருத்துகள் கூறுவதை விடுத்து, வேறு எல்லாப் பேச்சும் பேசுகிறீர்கள்.
புகழேந்தி: இப்போது கேள்வி கேட்கும் இடத்தில் நாங்களும், பதில் அளிக்கும் இடத்தில் நீங்களும் இருக்கிறீர்கள். அடுத்த நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின்போது நீங்கள் கேள்வி கேட்கும் இடத்திலாவாது இருப்பீர்களா எனத் தெரியவில்லை. ஆனால், நாங்கள் பதில் அளிக்கும் இடத்தில் இருப்போம்.
அமைச்சர் செங்கோட்டையன்: திமுக உறுப்பினர் பகல் கனவு காண்கிறார். அது பலிக்காது. 5 ஆண்டு சாதனைகளால் அதிமுகவின் 100 ஆண்டு ஆட்சி நடைபெற உள்ளது.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: இந்த நேரத்தில் பேரவைத் தலைவராக இருந்த காளிமுத்து கூறியதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. கறந்த பால் மீண்டும் மடி போய் சேராது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றார்.