தமிழக அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் பொ.சௌந்திரராஜன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத் தீர்மானங்கள்: மத்திய அரசு ஊழியர்களைப் போல, தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும். தமிழக அரசு அலுவலர்களுக்கு, மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு வழங்கியுள்ள சம்பளத்தை அமல்படுத்த அமைத்துள்ள குழுவின் அறிக்கையைப் பெற்று, விரைவாக அமல்படுத்த வேண்டும்.
7-வது ஊதியக் குழு சம்பளத்தை வழங்கும் வரை அரசு அலுவலர்களின் ஊதியத்தில் 20 சதவீதம் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணிநியமனத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்.
தமிழக அரசுத் துறை காலியிடங்களுக்கு ஆண்டு தோறும் பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.