சென்னை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மைய கட்டடங்களுக்கு விதிகளை தளர்த்தி சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த மையத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்து யோகா பயிற்சி பெற்று செல்கிறார்கள். ஈஷா அறக்கட்டளை சார்பில் இந்த யோகா மையம் அருகில் 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி மார்பளவு சிலை அமைக்கப்பட்டது.
இந்த சிலை திறப்பு விழா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடந்தது. இதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இதையடுத்து, ஈஷா யோகா மையம் அங்குள்ள ராஜவாய்க்கால் கால்வாயை ஆக்கிரமித்து ஆதி யோகி சிலை கட்டப்பட்டுள்ளதாகவும், ஈஷா யோகா கட்டடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்தும் அந்தப் பகுதி மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதற்கு தமிழக அரசு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஈஷா யோகா மைய கட்டடங்களுக்கு விதிகளைத் தளர்த்தி சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், வனத்துறை தடையில்லா சான்று அளித்தால், மலைதள குழு சிறப்பு அனுமதி அளித்தாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.