சென்னை: ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை செய்யாவிட்டால் கிராமப்புற மாணவர்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆங்கில வழி கல்வி தொடங்க அனுமதி மறுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்யாவிட்டால், கிராமப்புற மாணவர்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று வேதனை தெரிவித்த நீதிபதி, கிராம, மலைப்பகுதி ஆசிரியர்கள் பலரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 2012ம் ஆண்டுக்குப் பிறகு எத்தனை அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது? 2012ம் ஆண்டு முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் பயில்கிறார்கள்?
தமிழ் வழி ஆசிரியர்களே ஆங்கில வழி கல்வியை நடத்துவதில் எந்த பலனும் இல்லை. ஆங்கில வழி வகுப்பை நடத்த பிரத்யேக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்களா?
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப காரணம் என்ன? அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்குமாறு கட்டாயப்படுத்தாதது ஏன்?
பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவதை ஏன் தடை செய்யக் கூடாது? ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது?
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஏன் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்? உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது இதுவரை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? ஆசிரியர்கள் வருகையை சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்காதது ஏன்? ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்றினால் மட்டுமே மாணவர்கள் பிரகாசிக்க முடியும் என்று நீதிபதி கிருபாகரன் கூறினார்.
நீதிபதி எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் ஜூலை 14ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.