சென்னை: ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கினை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், அது தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி செல்வவிநாயகம் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
செல்வவிநாயகம் தன்னுடைய மனுவில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கு விடைகாணும் வகையில் விரிவான விசாரணை நடத்தக் கோரி, தான் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் ஆனால் அதன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 186 பேரிடம் விரிவான விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தன்னுடைய மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது நாளைக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.