சசிகலா, தினகரன் பேனர்களை மீண்டும் நிறுவவில்லை என்றால்... அதிமுக தொண்டர்கள் குழு எச்சரிக்கை
அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் பேனர்களை மீண்டும் நிறுவுமாறு அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் பேனர்களை மீண்டும் நிறுவுமாறு தினகரன் ஆதரவாளர்களான அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த பொதுச் செயலர் சசிகலா மற்றும் கழக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் ஆகியோரது பதாகைகள் மற்றும் படங்களை அப்புறப்படுத்தி அவர்களை அவமதித்த யாராக இருந்தாலும் வரும் ஜூலை 8ம் தேதி சனிக்கிழமைக்குள் மீண்டும் அவர்களுடைய பதாகைகள் மற்றும் படங்களை நிறுவிட வேண்டும்.
அப்படி தவறும் பட்சத்தில் அல்லது செய்ய தவறினால் வரும் ஜூலை 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த தொண்டர்கள், நிர்வாகிகள் உட்பட அனைவரும் ஒருங்கிணைந்து மீண்டும் அதே இடத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரது பதாகைகள் மற்றும் படங்களை வைப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.