சென்னை: சென்னை மூலக்கடையில் உள்ள துணிக் கடைக்குள் புகுந்த திருடன், ரூ.2.74 லட்சத்தைக் கொள்ளையடித்துவிட்டு, கடையில் இருந்து தப்பியபோது பொதுமக்களால் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.
மூலக்கடையில் உள்ள துணிக்கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த கொள்ளையன், அங்கிருந்த குடோனில் பதுங்கிக் கொண்டான். இது தெரியாத கடையின் பாதுகாவலர், அனைவரும் சென்றுவிட்ட பிறகு, கடையை பூட்டி வாசலில் காவலுக்கு அமர்ந்தார்.
கடை பூட்டப்பட்டதை அறிந்த கொள்ளையன், கடையில் இருந்த ரூ.2.74 லட்சத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் செல்ல வழியில்லாமல், இரவு முழுவதும் கடையிலேயே இருந்துள்ளான்.
காலையில் கடை திறக்கப்பட்டபோது யாருக்கும் தெரியாமல் கடையில் இருந்து வெளியேறிய கொள்ளையன், சுவர் ஏறி குதித்த போது பக்கத்து கடைக்காரர்களிடம் வசமாகச் சிக்கினான்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து காவல்துறையினரிடம் கொள்ளையன் ஒப்படைக்கப்பட்டான். முதற்கட்ட விசாரணையில், கொள்ளையன் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திருப்பதி (46) என்பதும், அதே கடையில், பண்டிகைக் காலங்களில் திருப்பதி வேலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில் கடை எப்போது திறக்கப்படும், மூடும் நேரம், பணம் வைக்கும் இடம் என அனைத்தும் திருப்பதி அறிந்திருந்ததால், தான் வேலை செய்த கடையிலேயே கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது. பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.