சசிகலா பற்றிய வாதம் வேண்டாம்: பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
இரட்டை இலைச் சின்னம் குறித்து மட்டும் வாதிடுங்கள், சசிகலா நியமனம் பற்றிய வாதங்கள் வேண்டாம் என்று பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
புது தில்லி: இரட்டை இலைச் சின்னம் குறித்து மட்டும் வாதிடுங்கள், சசிகலா நியமனம் பற்றிய வாதங்கள் வேண்டாம் என்று பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இரட்டை இலைச் சின்னம் குறித்த விசாரணை, தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் புது தில்லியில் இன்று காலை தொடங்கியது.
இதில், அதிமுக பொதுச் செயலர் சசிகலா தரப்பில் ஆஜரானவர்கள் முதலில் தங்களது வாதங்களை முன் வைத்தனர். அவர்கள் தரப்பு வாதம் முடிந்த பிறகு பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரானவர்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
அப்போது, அதிமுக தாற்காலிகப் பொதுச் செயலராக இருக்கும் சசிகலாவுக்கே தேர்தலில் போட்டியிட தகுதியில்லாத நிலை இருக்கிறது. அப்படி இருக்கும் போது, தகுதியில்லாத சசிகலா மற்றொரு வேட்பாளருக்கு எப்படி அங்கீகாரம் அளிக்க முடியும் என்று வாதிட்டனர்.
இதனைக் கேட்ட தேர்தல் ஆணையம், சசிகலா நியமனம் குறித்த வாதம் இப்போது வேண்டாம். இரட்டை இலைச் சின்னம் குறித்து மட்டும் இங்கே வாதங்களை முன் வையுங்கள் என்று அறிவுறுத்தியது.
விசாரணையின் போது சசிகலா தரப்பில் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், சிவி சண்முகம் பங்கேற்றுள்ளனர்.