புதுதில்லி: புதுதில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்றிரவு 7.30 மணிக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளனர்.
வறட்சி நிவாரணம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அமைப்பானது தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். அவர்களது போராட்டம் குறித்த தகவல்களை கேட்டறிந்தவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
இத்தனை நாட்களாக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது மத்திய அரசு செய்யும் மிகப்பெரிய தவறாகும். இது குறித்து உரிய கவனத்தை பெரும் பொருட்டு, விவசாயிகள் அமைப்பினர் இன்று இரவு 7.30 மணிக்கு இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் அவர்களை சந்திக்க உள்ளார்கள். விவசாயிகள் அமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு அவர்களுடன் நானும் குடியரசுத்தலைவர் பிரணாப் அவர்களை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு வாசன் தெரிவித்தார்.