ஆர்.கே நகர் பிரசாரத்துக்கு விஜயகாந்த் வருவார்: பிரேமலதா பேட்டி
விரைவில் நடைபெற உள்ள ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பங்குபெறுவார் என்று ...
சென்னை: விரைவில் நடைபெற உள்ள ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் பங்குபெறுவார் என்று அவரது மனைவியும், தேமுதிக மகளிர் அணித் தலைவருமான பிரேமலதா தெரிவித்தார்.
சென்னை போரூரில் இன்று நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்பு பிரேமலதா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தேமுதிக தலைவரான விஜயகாந்த் நலமாக இருக்கிறார். வழக்கமாக நடைபெறும் வருடாந்திர உடல் பரிசோதனைக்காகத்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். விரைவில் பூரண நலம்பெற்று, விரைவில் நடைபெற உள்ள ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் பங்குபெறுவார்.
தற்போதுள்ள ஆட்சியாளர்களும் சரி, அவர்கள் மீது அதிருப்தியின் காரணமாக வெளியேறியுள்ளவர்களும் சரி, மக்களை வைத்து அரசியல்தான் செய்கின்றனர். இந்த இடைத் தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் தேமுதிக வெற்றி பெரும். முதலில் நாம் தில்லியில் போராடி வரும் விவசாயிகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். நதிகளை இணைப்பதுதான் விவசாயிகளின் நலுனுக்கு ஒரே தீர்வு.அதேபோல் மீனவர்களின் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்றால் இலங்கையிடம் இருந்து கட்சத்தீவை மீட்பதுதான் சரியாக இருக்கும்.
இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.