புதுவையில் இருந்து ரௌடிகளை வெளியேற்ற காவல்துறைக்குமுதல்வர் நாராயணசாமி உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ரௌடிகளை வெளியேற்ற காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடாத நிலையில் நாராயணசாமி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் பதவி விலகினார். இதையடுத்து அத்தொகுதியில் கடந்த 2016 நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில் நாராயணசாமி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் முதல்வர் சட்டப்பேரவை தொகுதி அலுவலகம் அண்ணா நகரில் உள்ள பிற்பட்டோர் கழக வளாக கீழ்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதை பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் புதன்கிழமை திறந்து வைத்தார். முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். தில்லி பிரதிநிதி ஜான்குமார் பெயர்ப்பலகையை திறந்தார்.
Advertisement
உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், இரா. சிவா எம்.எல்.ஏ., முதல்வர் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., திமுக வடக்கு அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. நடந்த கொலைகள் வந்து திட்டமிட்டவை இல்லை. குடும்பத்துக்குள் நேரிட்டது. ரௌடிகளுக்குள் ஏற்பட்டது.
ரௌடிகளை ஒடுக்க குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
ரௌடிகளை புதுவையில் இருந்து வெளியேற்ற காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் பாதுகாப்பாக தான் உள்ளனர். சட்டம் ஒழுங்கை யார் சீர்குலைத்தாலும் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றார் நாராயணசாமி.