முகப்பு
தமிழ்நாடு

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம்: அறிவிக்கை வெளியிடாத கல்லூரி இயக்குநரகம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகத்துக்கான அறிவிக்கையை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிடாததால், கல்லூரிகள் குழப்பத்துக்குள்ளாகியுள்ளன.

Updated On : 12 மே, 2017 at 4:01 AM
பகிர்:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகத்துக்கான அறிவிக்கையை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிடாததால், கல்லூரிகள் குழப்பத்துக்குள்ளாகியுள்ளன.

தமிழகத்தில் 80 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கை மற்றும் விண்ணப்ப விநியோகத்துக்கான அறிவிக்கையை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிடுவது வழக்கம்.
இந்த அறிவிக்கையைத் தொடர்ந்து, அனைத்துக் கல்லூரிகளும் ஒரே சீராக விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 வேலை நாள்களுக்குப் பிறகு விநியோகம் நிறைவு பெறும்.
2017-18-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோக அறிவிக்கையை இயக்குநர் அலுவலகம் வெளியிடவில்லை. இதனால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக பல கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் குழப்பம் காரணமாக சென்னை மாநிலக் கல்லூரி உள்பட சில அரசு கல்லூரிகள் கடந்த 5-ஆம் தேதி விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கிவிட்டன. சில அரசுக் கல்லூரிகள் புதன்கிழமை (மே 10) முதல் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கியுள்ளன.
ஆனால், சென்னை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி, ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பல அரசுக் கல்லூரிகள் இன்னும் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கவே இல்லை. வெள்ளிக்கிழமை இந்தக் கல்லூரிகள் விநியோகத்தைத் தொடங்க உள்ளன. இயக்குநர் அலுவலகம் அறிவிக்கை வெளியிடாதது கல்லூரி நிர்வாகிகளிடையே மட்டுமின்றி, மாணவர்களிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தும் என பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் மஞ்சுளா, விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கல்லூரிக்குக் கல்லூரி மாறுபடும். எனவே, அந்தந்தப் பகுதி மாணவர்களின் ஆர்வத்துக்கு ஏற்ப விண்ணப்பத்தை அச்சடித்துக் கொள்ளவும், விநியோகத் தேதியை அந்தந்தக் கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ள வசதியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அறிவிக்கை வெளியிடப்படவில்லை. இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார்.

விண்ணப்பக் கட்டணம் உயர்வு

Advertisement

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2017-18 கல்வியாண்டுக்கான விண்ணப்பக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 மட்டுமே வசூலிக்கப்பட்டது. இது ரூ. 48-ஆ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சுயநிதிக் கல்லூரிகளில்...: அதுபோல சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் வழக்கம்போல விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 முதல் ரூ. 200 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பிரபல கல்லூரியில் விண்ணப்பக் கட்டணம் ரூ. 200 என வெளிப்படையாக அதன் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்துக் கல்லூரிகளும் இணையதள விண்ணப்பப் பதிவு முறையை அறிமுகமான நிலையிலும் தொடர்ந்து விண்ணப்பக் கட்டணம் கூடுதலாகவே வசூலிப்பது ஏழை மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், பேராசிரியர்களும் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா கூறியது: பல ஆண்டுகளாக விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இப்போது கல்லூரிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு ரூ.48-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பக் கட்டணம், பிற கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதை ஒழுங்குபடுத்த விரைவில் குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.