முகப்பு
தமிழ்நாடு

அன்னவாசல் அருகே இருதரப்பினர் இடையே மோதல்: ஒருவர் வெட்டி கொலை

அன்னவாசல் அருகே கோயில் விழா நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக சனிக்கிழமை ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:31 PM
பகிர்:
விராலிமலை: அன்னவாசல் அருகே கோயில் விழா நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக சனிக்கிழமை ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள இரும்பாளி ஊராட்சி கூத்தினிப்பட்டியில் உள்ள முருகன் கோயிலில் சித்திரை விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி தலைக்கட்டு முறை அடிப்படையில் பணம் வசூல் செய்து சுவாமிக்கு, அபிஷேக ஆராதனைகளுடன் மாபெரும் அன்னதான விழா நடத்தப்படும். 
இந்த நிலையில் நிகழாண்டுக்கான விழாவை நடத்துவது தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு விழா கமிட்டியினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனை நள்ளிரவு வரை தொடர்ந்துள்ளது. அப்போது மற்றோரு தரப்பைச் சேர்ந்த முத்துகருப்பையா மகன் செல்லத்துரை(40) மற்றும் அவரது அண்ணன் முருகேசன் அவரது மகன் புண்ணியமூர்த்தி(25), நாகராஜ்(19) ஆகியோரிடமிருந்து தலைக்கட்டுக்கு உரிய பணத்தை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு தரப்பினர் ஆயுதம் கொண்டு தாக்கியதில் செல்லத்துரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் புண்ணியமூர்த்தி, நாகராஜ் ஆகிய இருவரும் காயமடைந்து புதுகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயில் விழாவில் ஏற்பட்ட இப்பிரச்சனையால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. அசம்பாவிதம் ஏதும்நி கழாதவாறு  துணைக் கண்காணிப்பானர் பாலகுரு தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலிஸார் நிகழ்விடத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த அன்னவாசல் போலிஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.