அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் சாவு: அதிர்ச்சியில் சகோதரரும் சாவு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலக் குறைவால் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலக் குறைவால் பெண் ஒருவர் உயிரிழந்தார். அதிர்ச்சியில், அவரது சகோதரரும் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
வேதாரண்யம் யானைக்கட்டித் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ராஜலட்சுமி (65). ராஜலட்சுமியின் சகோதரர் சுப்பிரமணியன் (55). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் ராஜலட்சுமியின் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜலட்சுமிக்கு இருதய அறுவைச் சிகிச்சை அண்மையில் செய்யப்பட்டது. உடல்நலக் குறைவு காரணமாக ராஜலட்சுமி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இதையறிந்த அவரது சகோதரர் சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இருவரது சடலங்களும் ஒரே நேரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மயானத்தில் தனித்தனியே எரியூட்டப்பட்டன.