விரைவில் நடைமுறைக்கு வருகிறது புதிய வாடகை ஒப்பந்தச் சட்டம்
அனைவருக்கும் வீடு திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் விரைவில் புதிய வாடகை ஒப்பந்தச் சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
அனைவருக்கும் வீடு திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் விரைவில் புதிய வாடகை ஒப்பந்தச் சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
வேலை உள்ளிட்ட பல்வேறு அலுவல் காரணமாக, நகர்ப்புறங்களில் குடியேருவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு குடியேறுவோர் பெரும்பாலும் வாடகை குடியிருப்புகளையே சார்ந்துள்ளனர். அதிலும், தற்போது பெருநகரங்களில் வாடகை வீடுகளில் குடிபெயர்வதற்கு அதிக முன்பணம் தரவேண்டிய கட்டாயம் உள்ளது. அதுபோல் வாடகை, முன்பணம், குத்தகைக்கு இருப்பது, காலி செய்வது உள்ளிட்ட விஷயங்களில் இன்றளவும் குழப்பான சூழல் நிலவுகிறது.
57 ஆண்டுகளாக..: இதற்காக, தமிழக அரசு கடந்த 1960 -இல் குடியிருப்பு கட்டட குத்தகை வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம் ஒன்றை அமல்படுத்தியது. இருப்பினும், இந்த சட்டவிதிமுறைகளை குடியிருப்போர், குடியிருப்பு உரிமையாளர்கள் சரியாக பின்பற்றுவதில்லை. இந்த நிலையில், தற்போது புதிய மாதிரி வாடகை ஒப்பந்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது.
அனைவருக்கும் வீடு திட்டத்தில்: பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கான பணிகளை மத்திய வீட்டுவசதித் துறை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வீடு வாடகைக்கு குடியிருப்போருக்கும், உரிமையாளருக்கும் இடையிலுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண ஏதுவாக புதிய மாதிரி வாடகை சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய வீட்டுவசதித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
நிலத்தின் மதிப்பு உயர்வது, கூடுதல் வசதிகள் செய்யப்படுவது போன்றவற்றை காரணங்காட்டி, வீட்டு உரிமையாளர் அதிகப்படியான முன்பணம், வாடகையை வசூல் செய்கின்றனர். அத்துடன் இடைத்தரகர்களும் வீடு வாடகை உயர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளனர். எனவே, மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துடன் புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டமும் (New Model Tenancy Act) அமல்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.
மாநில அளவில் வாடகை தீர்ப்பாயம்
வீட்டு வாடகை முன்பணம், வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிப்பது, வாடகையை உயர்த்துவது உள்ளிட்டவை தொடர்பாக எழும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், மாநில அளவில் வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்கவும், தனி வாடகை ஆணையம் அல்லது வாடகை தீர்ப்பாயம் அமைக்க, புதிய வாடகை ஒப்பந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.