தேசத் துரோக வழக்கு: புகழேந்தி மனு தள்ளுபடி
அதிமுகவின் கர்நாடக மாநிலச் செயலாளரான புகழேந்தி தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்குக்கான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம்
அதிமுகவின் கர்நாடக மாநிலச் செயலாளரான புகழேந்தி தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்குக்கான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டிடிவி தினகரன் ஆதரவாளரும் அதிமுகவின் கர்நாடக மாநிலச் செயலாளருமான புகழேந்தி , சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நீட் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் வழங்கியதாகக் கூறி தன் மீதும் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், வெற்றிவேல் உள்ளிட்ட 17 பேர் மீது சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கே.ஆர்.எஸ். சரவணன் என்பவர் கொடுத்த புகாரில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் மேல் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும். தேசத் துரோக வழக்கின் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகழேந்தி உள்ளிட்டவர்களை போலீஸார் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நீட் விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற அரசின் வாதத்தை ஏற்று புகழேந்தியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.