காங்கிரஸ் மூத்த தலைவர் பீரன் சிங் எங்டி காலமானார்!
முன்னாள் மத்திய இணையமைச்சர் பீரன் சிங் எங்டி உடல் நலக் குறைவால் காலமானார்...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பீரன் சிங் எங்டி காலமானார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பீரன் சிங் எங்டி (வயது 81) வயது மூப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு குவாஹட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சர் பீரன் சிங் எங்டி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) காலை காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பீரன் சிங் எங்டியின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான திப்புவில் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பீரன் சிங் எங்டியின் மறைவுக்கு அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, அசாம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ் கோகோய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1970-கள் முதல் திப்பு மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக 5 முறை பீரன் சிங் எங்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இத்துடன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய இணையமைச்சராக அவர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.