கேரள மாநிலம், வண்டூர் காவல் நிலைய எல்லையில் சுமார் 5 வயது சிறுமியை காவல் துறையினர் மீட்டுள்ளனர். இச்சிறுமி 6 மாத குழந்தையாக இருந்தபோது தஞ்சை பெரியகோயில் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட குழந்தை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்குழந்தை குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் நீலகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரை அணுகலாம்.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வண்டூர் காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சந்தேகப்படும்படியாக 5 வயது சிறுமியுடன் சுற்றித் திரிந்த மூதாட்டியை அழைத்து காவலர்கள் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.
சந்தேகமடைந்த காவலர்கள் தீர விசாரித்தபோது, அச்சிறுமியின் பெயர் யாழினி என்பதும், 6 மாத குழந்தையாக இருந்தபோது தஞ்சை பெரிய கோயில் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது.
தற்போது சிறுமி யாழினி மலப்புரம் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, சிறுமி யாழினியின் உண்மையான பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் எவரேனும் இருப்பின், தகுந்த ஆவணங்களுடன் உதகையிலுள்ள மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களை 0423- 2445529 என்ற எண்ணிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.