பெங்களூரு: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக அவசர பரோல் கேட்டு, சசிகலா மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் சிறை தணடனை பெற்றுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளரான சசிகலா தற்பொழுது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது அவரது கணவரான நடராசன் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். இன்று காலை அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
இதன் காரணமாக அவரை பார்க்கும் பொருட்டு அவசர பரோல் கேட்டு சசிகலா சார்பில் சிறை நிர்வாகத்திடம் தற்பொழுது மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதே காரணம் குறித்து அவர் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அது உடனடியாக பரிசீலிக்கப்படவில்லை. இந்நிலையில் சசிகலா இன்று தான் பரோலில் இருக்கப் போகும் பகுதியின் உயர் மக்கள்பிரதிநிதி ஒருவரிடம் விளக்கக் கடிதம் பெற்று தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது.