ஆப்பிள் நிறுவனத்தின் செல்லிடப்பேசியில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயலி நிறுவப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மின் நுகர்வோர் தங்களின் மின்சாரக் கட்டணங்களை எளிதில் செலுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் செயலி மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் செல்லிடப்பேசி உபயோகிப்போருக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பஅசஎஉஈஇஞ என்ற செயலி ' ஆப்பிள் ஆஃப் ஸ்டோரில்' பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செயலியின் உள் நுழைவு பக்கத்தில் ஏற்கெனவே இணையதளத்தில் பதிவு செய்தோர், பயனீட்டாளரின் பெயர், கடவுச்சொல்லை உபயோகித்து பின், குறியீட்டு எண்ணை தேர்வு செய்து கொள்ளலாம். புதிய பயனீட்டாளர்கள் தங்களுடைய மின்நுகர்வோர் எண், கடவுச் சொல், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்தவுடன் செல்லிடப்பேசிக்கு செயற்பாட்டு எண் (Activation number) அனுப்பப்படும். அதனை உபயோகித்து கணக்குக்குள் நுழையலாம். இந்தச் செயலியின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி, மின் பரிவர்த்தனை, பயனீட்டு விவரங்கள், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.