தமிழ்நாடு

ரெளடி ஸ்ரீதரின் உடல் தகனம்

DIN

கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்ட காஞ்சிபுரம் ரெளடி ஸ்ரீதரின் உடல் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரெளடி ஸ்ரீதர், கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி கம்போடியாவில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, ஸ்ரீதரின் மகள், மகன், அவர் தரப்பு வழக்குரைஞர்கள் புருஷோத்தமன் உள்ளிட்டோர் ஸ்ரீதரின் சடலத்தை காஞ்சிபுரம் கொண்டுவர முயற்சி மேற்கொண்டனர். இரு நாட்டு தூதரகம் மூலம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, கம்போடிய நாட்டில் இருந்து கார்கோ விமானம் மூலம் ஸ்ரீதரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. இதையடுத்து, மத்திய அரசின் அமலாக்கத் துறை, சுங்கத் துறை அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திங்கள்கிழமை மதியம் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவரது சகோதரர் செந்தில், மகள் தனலட்சுமி ஆகியோரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றத்திலுள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, திருப்பருத்திக்குன்றம் சுடுகாட்டில் ஸ்ரீதரின் உடல் திங்கள்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது.
இதையொட்டி, காஞ்சிபுரத்தின் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மரபணு சோதனைக்காக...
ஸ்ரீதரின் சடலம் உடல்கூறு ஆய்வுக்குப்பின், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி கூறுகையில், ஸ்ரீதரால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரிலும், பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளதாலும் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்தார். அவர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது. இதையடுத்து, அவரது உடல் குறித்து உறுதி செய்ய, செங்கல்பட்டு மருத்துவமனையில் கைரேகை மற்றும் மரபணு சோதனைக்காக உடல்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT