ஐப்பசி சர்வ அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கரையில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள், அக்னி தீர்த்தக் கரையில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், ராமநாதசுவாமி கோயிலுள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு வழிபாடு நடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை, திருக்கோயில் நிர்வாகம் சார்பில் இணைஆணையர் கோ.செ. மங்கையர்க்கரசி செய்திருந்தார். பாதுகாப்புப் பணியில், காவல் துணைக் கண்காணிப்பாளர் மு. மகேஷ் தலைமையில் காவல் துறையினர் ஈடுபட்டனர். சுகாதாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆணையர் (பொறுப்பு) தனலெட்சுமி மற்றும் சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.