கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பழங்கால கல் செக்குகள் பறிமுதல்
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றிச் சென்ற பழங்கால கல் செக்குகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றிச் சென்ற பழங்கால கல் செக்குகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் -தென்காசி சாலையில் வியாழக்கிழமை இரவு லாரியில் 7 கல் செக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் கொண்டு செல்லப்பட்டதாம். தகவலறிந்த காவல் உதவி ஆய்வாளர்கள் ஸ்தேவான்சேகர், சுரேஷ் உள்ளிட்டோர் லாரியை மடக்கி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
லாரி ஓட்டுநர் திருச்செங்கோட்டைச் சேர்ந்த குமாரசாமி மகன் சக்திவேலிடம் நடத்திய விசாரணையில், அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிகளிலிருந்து தனியாருக்குச் சொந்தமான 7 கல் செக்குகளை இடைத்தரகர்கள் மூலமாக வாங்கி கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் கைவினைப் பொருள் நிறுவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் உதயகுமார் செக்குகளை ஆய்வு செய்து விசாரணை செய்தார்.
பின்னர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர்கள் தூத்துக்குடி கிங்ஸ்லி தேவானந்த், கன்னியாகுமரி கனகராஜ் உள்ளிட்டோரும் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செக்குகளையும், அவை இருந்த வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: தமிழகத்தில் பல்வேறு பழமை வாய்ந்த அடையாளங்களை இழந்து விட்டோம். இதேபோன்று தொன்மை வாய்ந்த புழக்கத்தில் இல்லாத பொருள்களையும் சில கும்பல் குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று வெளிநாடுகளுக்கு விற்று வருகின்றன. இதுபோன்ற கல் செக்குகள், சுமைதாங்கிகள், கல்வெட்டுகள் ஆங்காங்கே உள்ளன. அவ்வாறு இருப்பது பொதுமக்களுக்குத் தெரிய வந்தால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குத் தகவல் கொடுத்து அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள செய்ய வேண்டும் என்றனர்.