காய்ச்சல் பாதிப்பு: சிறுவன், இளைஞர் சாவு
காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் பெரியசாமி (23). இவர் கடந்த சில தினங்களாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அக்டோபர் 15-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், மணியன் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சூர்யபிரகாஷ் (3). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சூர்யபிரகாஷ் அக்டோபர் 17-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். பரம்பரையாக வரும் நோய்த் தொற்று காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 53 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு இருவரும், நிமோனியா காய்ச்சலுக்கு இருவரும், வைரஸ் காய்ச்சலுக்கு 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 41 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 162 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.