முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பேருந்து: ஏ.ஆர்.ஏ.ஐ ஒப்புதல்

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பேருந்து வடிவத்துக்கு மத்திய ஏ.ஆர்.ஏ.ஐ ஒப்புதல் அளித்தது.

Updated On : 23 அக்டோபர், 2017 at 9:33 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:26 PM

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ஒரே மாதிரியான வடிவத்துக்கு ஏ.ஆர்.ஏ.ஐ (ARAI) அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படைியல் AIS 052 என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. எனவே இனிவரும் காலங்களில் தயாரிக்கப்படும் புதிய பேருந்துகள் இந்த விதியின் அடிப்படையில் தான் அமையும்.

இந்த புதிய விதிகளின் கீழ் அரசு மற்றும் தனியார் பிரிவுகளைச் சேர்ந்த உள்ளூர், வெளியூர், சொகுசு மற்றும் வால்வோ ரக பேருந்துகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த புதிய விதி கடந்த 2012-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டு 2015 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும் இதற்கான அனுமதி தற்போது தான் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இனிவரும் காலங்களில் தயாரிக்கப்படவுள்ள புதிய உள்ளூர் (மாநகரப் பேருந்து) பேருந்துகளின் இருக்கைகள் 40-ல் இருந்து 37-ஆக குறைக்கப்படுகிறது. அதுபோல வெளியூர் பேருந்துகளில் 57-ல் இருந்து 51-ஆக குறைக்கப்படுகிறது. இதன்மூலம் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள அவசர உதவி கதவு எளிதில் பயன்படுத்தும் விதமாக அமையும்.

Advertisement

அதுமட்டுமல்லாமல் இருக்கைகளுக்கு இடையிலான இடவசதி அதிகரிக்கப்படுகிறது. உயரமானவர்களும் எளிதில் அமரக்கூடிய வகையில் தற்போது உள்ள இருக்கை முறைக்கு மாற்றாக தனித்தனியாக 2 வேறு இருக்கைகள் அமைக்கப்படும். 

அனைத்து பேருந்துகளின் நுழைவாயிலில் கட்டாயம் கதவு அமைக்கப்படும். அதன் முழுக் கட்டுப்பாடும் பேருந்து ஓட்டுநரிடம் அமையும்படி வடிவமைக்கப்படும். இருக்கைகள் குறைந்தாலும் இடவசதியும், அவசரகால நடவடிக்கைகளுக்கு ஏற்றதுபோன்ற வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கரூர் போன்ற பகுதிகளில் இந்த புதிய விதிகளின் அடிப்படையிலேயே பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக போக்குவரத்துத்துறையின் 23 பணிமனைகளில் தயாரிக்கப்பட்டு வரும் உள்ளூர், வெளியூர் மற்றும் சொகுசுப் பேருந்துகளும் இதன் அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகிறது. 

தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த புதிய வடிவிலான பேருந்துகள் அடுத்து ஒரு ஆண்டுக்குள்ளாக உபயோகத்துக்கு வரவுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் தற்போது வரை உபயோகத்தில் உள்ள 80 சதவீத பேருந்துகளுக்கு இந்த விதிகளின் அடிப்படையிலான வசதிகள் இல்லை. குறிப்பாக 23,078 வெளியூர் பேருந்துகளும், 3,685 சென்னை மாநகரப் பேருந்துகளும், 1,131 சொகுசுப் பேருந்துகளும், 92 வால்வோ பேருந்துகளும் பழைய வடிவமைப்பின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.