மாணவி அனிதா உடலுக்கு இயக்குநர் பா. இரஞ்சித் அஞ்சலி!
இயக்குநர் பா. இரஞ்சித் அரியலூரில் உள்ள மாணவி அனிதாவின் வீட்டுக்குச் சென்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்...
மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் மாணவி அனிதா (17) அரியலூர் அருகே நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் திருச்சி காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா. இவருக்கு 4 அண்ணன்கள் உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லையே என கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்த அனிதா, வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற செந்துறை போலீஸார் அனிதாவின் சடலத்தைப் பிரேதபரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அனிதாவின் தற்கொலைக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் பா. இரஞ்சித் அரியலூரில் உள்ள மாணவி அனிதாவின் வீட்டுக்குச் சென்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஒரு தலைமுறையின் பெருங்கனவை சிதைத்த சமுக நீதியற்ற இந்த தேசத்தில் உன் கடைசி நிமிட வலி பரவட்டும் நாடெங்கும் என்று எழுதியுள்ளார் பா. இரஞ்சித்.