எம்எல்ஏக்கள் கூட்டத்தின் மூலம் பெரும்பான்மை இல்லை என்பது தெரிந்திருக்கும்: பழனியப்பன்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தின் மூலம், பெரும்பான்மை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று தினகரன் அணியைச் சேர்ந்த பழனியப்பன் கூறியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தின் மூலம், பெரும்பான்மை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று தினகரன் அணியைச் சேர்ந்த பழனியப்பன் கூறியுள்ளார்.
சென்னை பெசன்ட்நகரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான பழனியப்பன், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 105 எம்எல்ஏக்கள் பங்கேற்றிருப்பதாக ஒரு தொலைக்காட்சியிலும், மற்றொரு தொலைக்காட்சியில் 109 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. உண்மையில் எவ்வளவு எண்ணிக்கை கலந்து கொண்டார்கள் என்று என்று தெரியவில்லை. ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்த கூட்டத்தில் வெறும் 110 எம்எல்ஏக்கள்தான் கலந்து கொண்டதாக எடுத்துக் கொண்டாலும் இன்னும் 7 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. எனவே, இதன் மூலம், பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகிறது.
இதை வைத்து ஆளுநர், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட வேண்டும். இதனை உள்கட்சி பிரச்னை என புறந்தள்ள முடியாது.
அந்த கூட்டத்தில் எங்கள் அணியின் எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர். அவர்கள், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள். எனவே, எங்கள் அணி மேலும் பலம்பெறும் என்று கூறினார்.