சென்னை: அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுடன் ராஜ்பவனில் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சந்தித்துப் பேசுகிறார்.
ரத்தினசபாபதி, கலைச்செல்வன், கருணாஸ் ஆகிய 3 எம்எல்ஏக்கள் மற்றும் நாகராஜன், விஜிலா சத்யானந்த், நவநீத கிருஷ்ணன், உதயகுமார், கோகுலகிருஷ்ணன், செங்குட்டுவன், ராதாகிருஷ்ணன் ஆகிய 7 எம்பிக்களுடன், டிடிவி தினகரன் ஆளுநர் மாளிகைக்குச் சென்றுள்ளார்.
தனக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் என 10 பேருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார் தினகரன்.
ஆளுநர் மாளிகையில் நண்பகல் 12 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பின்போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் உடனிருப்பர் என்று முன்னதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பின் பின்னணி:
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர்.
இந்தக் கடிதத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ஆளுநரை டிடிவி தினகரன் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிடிவி தினகரன் அறிவிப்பார் எனத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான வாய்ப்புகள் தொடர்பாகவும் அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.