முகப்பு
தமிழ்நாடு

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த புதுவை எம்.எல்.ஏ.க்கள்

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்காமல் புதுவையைச் சேர்ந்த அந்தக் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்தனர். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்காமல் புதுவையைச் சேர்ந்த அந்தக் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்தனர். 
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, அவர் டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார். இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்ட அதிமுக அணிகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இணைந்தன. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் புதுவையில் 17 நாள்கள் தங்கியிருந்தனர். பின்னர், மைசூருக்கு புறப்பட்டுச் சென்றனர். 
இதற்கிடையே, புதுச்சேரியில் அதிமுகவுக்கு அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 
தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த இவர்கள் கடந்த மாதம் கடலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புதுவை வழியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற போது, அவரை எம்.எல்.ஏக்கள் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றனர். 
இந்த நிலையில், மீண்டும் 4 எம்.எல்.ஏ.க்களும் தினகரன் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். மேலும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான மாநிலச் செயலாளர் புருஷோத்தமன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஓம் சக்தி சேகர் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
சென்னையில் அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 4 எம்எல்ஏக்கள், 58 பொதுக் குழு உறுப்பினர்களுக்கு தலைமைக் கழகத்தில் இருந்து முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
ஆனால், பொதுக்குழுக் கூட்டத்துக்குச் செல்லாமல் 4 எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்தனர். 
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் தலைமையில் பொதுக் குழு உறுப்பினர்கள் சென்னைக்கு புறப்பட்டுச் சென்று கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →