முகப்பு
தமிழ்நாடு

இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம்: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பட்டியல்

இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:


சென்னை: இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

பலத்த பாதுகாப்புக்கிடையே சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காலை திட்டமிட்டபடி தொடங்கியது.

டிடிவி ஆதரவாளரும், அதிமுக தில்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். செயற்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்களில் 95% பேர் வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று முன்னதாகக் கூறப்பட்டது.

அதன்படி, 

1. ஓரணியில் திரண்டதற்கு நன்றி, பாராட்டு.  இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு எதிர்வரும் தேர்தல்களில் இரட்டை இலைச் சின்னத்துடன் ஓரணியில் போட்டியிட முடிவு.

2. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் அவரவர் பதவிகளில் நீடிப்பார்கள்.

3. எம்ஜிஆர் நுற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடி வரும் அரசுக்கு பாராட்டு.

4. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி.

5. வர்தா புயல் பாதிப்பின் போது மீட்புப் பணிகளையும், வறட்சியின்போது நிவாரணப் பணிகளையும் சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு.

6 அதிமுக அரசை காப்பாற்றி சிறப்பாக நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கு பாராட்டு.

7. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அவரது இடத்தை யாரும் நிரப்ப முடியாது. எனவே அவரே நிரந்தர பொதுச் செயலர். எனவே, இனி அதிமுகவில் பொதுச் செயலர் பொறுப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த தீர்மானத்தின் மூலம் வி.கே. சசிகலா பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட நியமனம் ரத்து செய்யப்படுகிறது.

8. தற்காலிகமாக உருவாக்கப்பட்ட துணைப் பொதுச் செயலர் பதவியும் நீக்கப்படுகிறது. அவரது நியமனங்கள் ரத்து

9. கட்சியின் கட்டுக்கோப்பை  சீர்குலைக்கும் வகையில் டிடிவி தினகரன் அறிவிக்கும் நியமனங்கள் செல்லாது.

10. தொண்டர்களின் மனம் அறிந்து கட்சியை வழிநடத்த புதிய பதவி ஏற்படுத்துவோம்.

11. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

12. கட்சி விதிகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்படும் என்று 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

முழு கட்டுரையைப் படிக்க →