சென்னை: டிடிவி தினகரன் அணி எம்எல்ஏக்கள் சிலர் கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருப்பது குறித்து நடிகர் கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இன்று காலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா; குதிரைபேர அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற தடையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் நேற்று அறிவித்தது.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை என்று கூறும் அரசு, தொகுதிப் பணிகளைச் செய்யாமல் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்களுக்கு மட்டும் எப்படி ஊதியம் வழங்குகிறது?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது போல், எம்எல்ஏக்களையும் எச்சரிக்கலாமே என்றும் கமலஹாசன் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில், சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் தொடர்பாக கமலஹாசன் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.