மதுரை: இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் விரைந்து செயல்படுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு வந்த போது, சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்ட போது 15 நாட்களில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னையில் இவ்வளவு கால தாமதம் ஏன் என்று கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளித்த தேர்தல் அணையம், இரு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுவதால் கால தாமதம் ஏற்படுகிறது. 2 அணிகளும்தான் மாறி மாறி கூடுதல் கால அவகாசம் கோரி வருகின்றன என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 31ம் தேதிக்குள் இரட்டை இலைச் சின்னம் குறித்து முடிவெடுத்து அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.