வரலாறு திரும்புகிறது அன்று பி.எச்.பாண்டியன்-இன்று தனபால்
சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்த பிறகு, பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறை 29 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் உருவாகியுள்ளது.
சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்த பிறகு, பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறை 29 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் உருவாகியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-இல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு யார் முதல்வர் என்ற சர்ச்சை அதிமுகவில் வெடித்தது. ஆர்.எம்.வீரப்பனின் ஆலோசனை மற்றும் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார்.
இதனை கட்சியின் மற்றொரு தலைவராக விளங்கிய ஜெயலலிதா ஏற்கவில்லை. அப்போது தமிழக சட்டப் பேரவையில் அதிமுகவுக்கு 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. அவர்களில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர். மற்றவர்கள் ஜானகி அணியை ஆதரித்தனர். அப்போது பேரவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் ஜானகி அணியை ஆதரித்தார்.
பேரவையில் நடந்தது என்ன? பேரவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையில் இருந்து நீக்கினார். இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1986-இல் திமுகவின் பத்து உறுப்பினர்கள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியலமைப்புச் சட்ட நகலை எதிர்த்தனர். இதற்காக அவர்கள் அவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
எனவே, சட்டப் பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 191-ஆகக் குறைந்தது. இந்த குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஜானகி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 1988-ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை, அவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, பேரவை கூடியதும் திடீரென அறிவிப்பை ஒன்றை அவர் வெளியிட்டார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களது பதவியில் இருந்து விலகுவதாக தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இதனால், அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த கூச்சல்-குழப்பத்தைத் தவிர்க்க பேரவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார். மீண்டும் பேரவை கூடியதும், ஜெயலலிதா தரப்பு எம்.எல்.ஏ.-க்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அதில், ஜானகி ராமச்சந்திரன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போதைய நிகழ்வு: இப்போது அதிமுக உறுப்பினர்களில் தினகரன் அணியைச் சேர்ந்த 18 பேரை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 108-ஆகக் குறைந்துள்ளது. அப்போது பி.எச்.பாண்டியன் எடுத்த அஸ்திரத்தை, இப்போது பி.தனபால் எடுத்துள்ளார்.